நிர்வாகத் தயாரிப்பாளராக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயணித்து, தற்போது தயாரிப்பாளராக இருப்பவர் தனஞ்செயன். தனது போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
தற்போது அவர் இயக்குனராகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களை கற்று தந்தது. எனது பிலிம் இன்ஸ்ட்டிடியூட் பயணம் பல சினிமா ஜாம்பவான்களுடன் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
அந்த அனுபவங்கள் எனக்குள் ஒரு கதையை ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை பல வருடங்களாக விதைத்திருந்தது. ஆனாலும் பல்வேறு வேலை தொடர்பான காரணங்களால் அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இறுதியில் எனது மனைவி எனது இந்தப்பயணத்தை ஊக்குவித்து துவங்கி வைத்தார். கடந்த 4 மாதங்களாக நானும் எனது குழுவும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம்.
பின்னர் நடிகர்களிடமும் தொழில்நுட்ப கலைஞர்களிடமும் எனது திரைக்கதையை சொன்னபோது அவர்கள் வெகுவாக பாராட்டி, மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள்.
இப்படத்தில் பங்குபெறவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் டிசம்பரில் வெளியிட உள்ளோம். ஜனவரி 2020ல் ஷூட்டிங்கை துவங்க உள்ளோம். இது ஒரு புதிய வகை க்ரைம் திரில்லர் படமாக ஒரு புத்தம் புது அனுபவமாக இருக்கும். என்றார்.